<=================> T N T C W U - திருச்சி மாவட்ட சங்கம் தங்களை தோழமையுடனும், நட்புடனும் வரவேற்கிறது <=================>

புதிய சட்டம் தொழிலாளர்களைக் காக்குமா?

வ. ரங்காசாரி

பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்றதிலிருந்து மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ள விஷயங்களில் மிகவும் முக்கியமானது தொழிலாளர் சட்ட திருத்தமாகும்.
ஆளும் கட்சி கொண்டு வரும் எந்த சட்ட திருத்தத்திற்கும் எதிர்க்கட்சிகள் ஆதரவு அளிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது. ஆனால் தொழிலாளர் சட்ட திருத்தத்துக்கு எதிர்க்கட்சிகள் குறிப்பாக கம்யூனிஸ்ட் கட்சிகள், தொழிலாளர் சம்மேளனங்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்து வருகின்றன.
7 பேர் இருந்தாலே தொழிற்சங்கம் ஆரம்பிக்கலாம் என்றிருந்த நிலை புதிய சட்டத்தில் முற்றிலும் பொருந்தாது. புதிய சட்டத்தின்படி 100 தொழிலாளர்களுக்கு மேலாகவோ அல்லது மொத்த பணியாளர்களில் 10 சதவீதம் பேர் உறுப்பினர்களாக இருந்தால் மட்டுமே தொழிற்சங்கங்கள் ஆரம்பிக்க முடியும். மேலும் தொழிலாளர்கள் மட்டும்தான் தொழிற்சங்கங்களை உருவாக்க அனுமதிக்கப்படுவர்.
முறைசாரா தொழில்களில் உள்ள வர்கள் தொடங்கப்படும் தொழிற் சங்கங்களில் வெளியிலிருந்து இரண்டு பேர் தொழிற்சங்க உறுப்பினராவதற்கு புதிய சட்டம் வகை செய்துள்ளது.
லே-ஆப் அனுமதி திருத்தம்
தொழிற்சங்கங்கள் தொடங்கு வதற்கான விதிமுறைகள் கடுமையாக் கப்பட்டுள்ளன. மேலும் 100 பணியா ளர்கள் மற்றும் அதற்கு அதிகமாக தொழிலாளர்களைக் கொண்டுள்ள நிறுவனங்கள் ஊதியமில்லாத விடுமுறை (லே-ஆப்) அளிப்பதற்கு அரசின் அனுமதி பெற வேண்டும். புதிய வரைவில் அது தேவையில்லை.
300 ஊழியர்களுக்குக் குறைவாக பணிபுரியும் தொழிற்சாலைகள், தொழில் நிறுவனங்கள் அரசின் அனுமதியின்றி கதவடைப்பு செய்ய புதிய சட்டம் வகை செய்துள்ளது.
300 பேருக்குக் குறைவான பணியா ளர்கள் என்பதால் இனி நிறுவனங்கள் 299 பேரைக் கொண்ட சிறிய நிறுவனங் களாக பல நிறுவனங்களைத் தொடங்கும். தொழிலாளர்களின் உரிமைகள் மறுக்கப்படுவதோடு, தொழிற்சங்கங்கள் அமைப்பதற்கான விதிமுறைகள் கடுமையாக்கப் படுவதால் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
ஒரே சட்டம்
இருந்தாலும் ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஊதியத்தை உறுதி செய்யும் சட்டம் புதிய வரைவு மசோதாவில் உள்ளது. மேலும் மூன்று தொழிலாளர் சட்டங்களை ஒன்றிணைத்து ஒரே சட்டமாகக் கொண்டு வர அரசு முடிவு செய்துள்ளது. அதாவது தொழில் தாவா சட்டம் 1947, தொழில் சங்க சட்டம் 1926 மற்றும் தொழிலாளர் சட்டம் 1946 ஆகிய மூன்றையும் ஒன்றிணைத்து ஒரே சட்டமாகக் கொண்டு வர அரசு திட்டமிட்டுள்ளது. புதிய தொழில் சட்ட வரைவு குறித்து தொழிலாளர் சங்கங்களுடன் கடந்த மே மாதம் அரசு ஆலோசனை நடத்தியது. அப்போதே பாஜக அங்கம் வகிக்கும் தொழில் சங்கங்கள் தவிர ஏனைய சங்கங்கள் அனைத்தும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தன.
தொழில் நிறுவனங்களை மூட நேர்ந்தால் தற்போது இழப்பீடாக வழங்கப்படும் 15 நாள் ஊதியத்துக்குப் பதிலாக 45 நாள் ஊதியம் அளிக்க புதிய சட்ட மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது என்ற ஒரு சாதக அம்சத்தைவிட மற்றவையெல்லாம் தொழிலாளர் விரோதமானவை என்றே தொழில் சங்கங்கள் கருத்து தெரிவித்துள்ளன.
எளிதாகும் பணி நீக்கம்
தொழிற்சாலையில் ஓராண்டுக்கு மேலாக பணிபுரியும் ஊழியரை 3 மாத நோட்டீஸ் அளித்து பணி நீக்கம் செய்யவும் புதிய மசோதாவில் வகை செய்யப்பட்டுள்ளது. அதாவது ஆள்குறைப்பு செய்ய வேண்டி யிருந்தால் இத்தகைய விதிமுறையை நிறுவனங்கள் பின்பற்றலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் இந்த விதிமுறை கட்டிடங்கள், பாலங்கள், சாலைகள், சுரங்கங்கள், அணைகள் கட்டுமானப் பணியில் ஈடுபட்டிருக்கும் தொழிலாளர்களுக்குப் பொருந்தாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒப்பந்த தொழிலாளர்கள்
தொழில் வளர்ச்சி அதிகரிக்கா ததற்கு இங்குள்ள நடைமுறைக்குப் பொருந்தாத தொழிலாளர் சட்டமும் முக்கிய காரணமாகும். நினைத்தபோது வேலைக்கு வைத்துக் கொண்டு, நினைத்தபோது வேலையை விட்டு நீக்கும் உரிமை வேண்டும் என்று தொழிலதிபர்கள் விரும்புகின்றனர். நிரந்தரத் தொழிலாளர்களைவிட ஒப்பந்த அடிப்படையில் பணி புரியும் தொழிலாளர்களையே விரும்பு கின்றனர். இப்போது கொண்டு வந்துள்ள சட்ட வரைவு பெரும்பாலும் தொழில் நிறுவனங்களுக்கு சாதகமாக இருப்பதாக தொழிற்சங்கங்கள் கூறுவதை புறக்கணித்துவிட முடியாது.
தொழிலாளர்களுக்காகச் செலுத்த வேண்டிய வருங்கால வைப்புநிதி பங்களிப்பு, பணிக்கொடை போன்ற வற்றை நிதிச் சுமையாகவே கருது கின்றனர். தொழிலாளர்களின் உரிமை களை நிலைநாட்ட தேவைப்படும் தொழிற்சங்கங்களைத் தொழில் நிறுவனத்தின் அமைதியைக் குலைக்கும் அமைப்பாகவே பார்க்கின் றனர். இந்தக் காரணங்களால் அவர்கள் சட்டங்களைத் திருத்தக் கோருகின்றனர்.
தொழிற்சாலைகள் சட்டம், சிறார் தொழிலாளர் தடைச் சட்டம், தொழில் தகராறுகள் தீர்வு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், கொத்தடிமைத் தொழிலாளர் ஒழிப்பு முறை சட்டம், ஒப்பந்தப் பணியாளர் முறைப்படுத்தல் சட்டம், போனஸ் சட்டம், தொழில் பழகுநர் சட்டம் என்று தொழிலாளர் நலம் சார்ந்து 144 சட்டங்கள் அமலில் உள்ளன.
போனஸ் திருத்தம்
போனஸ் சட்டத்தில் தொழிலா ளர்கள் போனஸ் பெறுவதற்கான ஊதியத்தைக் கணக்கிடுவதில் ஊதிய வரம்பை நிர்ணயித்து ஒரு பிரிவும், அதிகபட்சம் இவ்வளவுதான் போனஸ் தர வேண்டும் என்று இன்னொரு பிரிவும் இருப்பதால் தொழிலாளர்கள் போனஸ் பெறுவதைவிட போனஸ் பெறாமல் தடுப்பதையே இச்சட்டம் பார்த்துக்கொள்கிறது. 1971-ல் இயற்றப்பட்ட இச்சட்டம் இப்போதைய வாழ்க்கைச் செலவுகள், ரூபாய் மதிப்பு, பணவீக்கம் போன்றவற்றுக்கு ஏற்ப திருத்தப்படவே இல்லை.
தொழில் நிறுவனங்கள் பெறும் லாபத்துக்கும், மூத்த நிர்வாகிகள் பெறும் ஊதியத்துக்கும் உச்ச வரம்பு ஏதும் இல்லாதபோது தொழிலாளர்கள் பெற வேண்டிய போனஸுக்கு மட்டும் ஏன் உச்ச வரம்பு என்று புரியவில்லை.
தொழிலாளர் சட்டங்களைத் திருத்தும்போது அனைத்துத் தரப்பா ரையும் கவனத்தில் கொள்ள வேண்டும். கீழ்த்தட்டு மக்களுடைய வாங்கும் சக்தியை அதிகரிப்பதன் மூலம்தான் இந்தியப் பொருளாதாரத்தை மீட்க முடியும். அரசுகளும் அரசியல் கட்சிகளும் அதிகார வர்க்கமும் தொழிற்சங்க இயக்கமும் அமர்ந்து பேசி புதிய வழி காண வேண்டும்.
கேள்விக்குறியாகும் பாதுகாப்பு
தொழிற்சாலைகள் அதிகப் பதிவேடுகளைப் பராமரிப்பதைக் குறைத்தது, ஆலை ஆய்வர்கள் அடிக்கடி ஆலைக்குள் நுழைந்து தொல்லை கொடுப்பதைத் தடுத்தது, ஆலைக்குள் நடைபெறும் விபத்து போன்ற சம்பவங்களுக்கு ஆலை முதலாளிகளைக் கைது செய்யும் பிரிவை நீக்கியதெல்லாம் சீர்திருத்த நடவடிக்கைகள் என்று கூறப்படுகிறது. தொழிலாளர்களின் உடலுக்கும் உயிருக்கும் பாதுகாப்பு அளிப்பதில் அரசு சமரசம் செய்துகொள்ளக்கூடாது. அதற்கான சாதனங்கள் ஆலைகளில் இருப்பதும் பயன்படுத்தப்படுவதும் அவசியம். அந்நிய முதலீடு, தடையற்ற வர்த்தகம், ஏற்றுமதிக்கு ஊக்குவிப்பு போன்றவற்றுக்குத் தரும் முக்கியத்துவத்தைத் தொழிலாளர் நலன்களுக்கும் அளிப்பதை அரசு உறுதி செய்ய வேண்டும்.